பாக். தாக்குதலில் தாலிபான் தலைவர் பாசுல்லா பலி?
இஸ்லாமாபாத்: தாலிபானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மவுலான பாசுல்லா பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
தாலிபான்களை அழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தூண்டுதல் காரணமாக பாகிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
தாலிபான்களின் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மெக்சுத்தை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவர்களுக்கு ரூ. 5 கோடி பரிசளிக்கப்படும் என கூறியது.
இந்நிலையில் சமீபத்தில் தாலிபான்களின் மற்ற முக்கிய தலைவரான மவுலான பாசுல்லா என்பவர் தெக்ரிக்-இ-ஷரியத்-இ-முகமது என்ற அமைப்பின் செய்தி தொடர்பாளர் முஸ்லிம் கான் என்பவருடன் பேசியதை பாகிஸ்தான் ராணுவம் உளவு அறிந்தது. அப்போது சமீபத்தில் நடத்திய தாக்குதலில் தனக்கு படுகாயம் ஏற்பட்டுவிட்டதாக பாசுல்லா தெரிவி்த்துள்ளார்.
இதை தொடர்ந்து அவரது இருப்பிடத்தை அறிந்த பாகிஸ்தான் ராணுவம் தெற்கு வசிர்ஸ்தான் பகுதியில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் நேற்று மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியது. இதில் பாசுல்லா பலியாகிவிட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இதை உறுதிசெய்யவில்லை.
ஈராக்கி்ல் ஜோ பிடேன்...
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் நேற்று ஈராக்கிற்கு திடீர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் அதிபர் ஒபாமா, பிடேனிடம் ஈராக்கிலிருந்து வெளியேறும் அமெரிக்க ராணுவம் குறித்த விவகாரங்களை கவனிக்கும் பொறுப்புகளை வழங்கியிருப்பதால் அவர் தற்போது ஈராக் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அவர் ஈராக் அதிபர் ஜலாய் தலபனி, பிரதமர் நூரி அல்-மலிகி ஆகியோரை சந்திக்கிறார். பின்னர் அமெரிக்க ராணுவ தளபதிகளையும், படை வீரர்களுடன் நாளை அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடுவார் என தெரிகிறது.