மின்னணு வாக்கு எந்திரம் வேண்டாம்- வாக்குச் சீட்டுக்கு மாறுவோம்: அத்வானி
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் திரண்டு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
தமிழகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெருமளவு மோசடிகள் செய்யப்பட்டிருப்பதாக அதிமுக, பாமக ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன. பாமக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் டெல்லி தலைமை செயலாளர் ஓமேஷ் சைகல், மின்னணு எந்திரத்தில் குளறுபடி நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இப்பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
முக்கிய எதிர்கட்சியான பாஜகவும் அடுத்து நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில தேர்தல்களுக்கு வாக்கு சீட் முறையை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவர் அத்வானி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
தேர்தல் ஆணையம், மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் எந்த குளறுபடியும் செய்ய முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். இதிலிருக்கும் குறைகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு திரும்பி விடலாம்.
கடந்த தேர்தலில் மின்னணு எந்திரத்தில் குளறுபடி நடந்தது என யாரும் கூறவில்லை. ஆனால், இதிலிருக்கும் குறைகளுக்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.