மகாராஷ்டிராவின் கமாண்டோப் படை போர்ஸ் ஒன் ஆக. 15ல் தொடக்கம்
மும்பை: என்.எஸ்.ஜி. படையைப் போலவே உருவாக்கப்பட்டுள்ள போர்ஸ் ஒன் என்ற கமாண்டோப் படை, ஆகஸ்ட் 15ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதி பயங்கர தீவிரவாதத் தாக்குலைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி. படையைப் போலவே அதி நவீன கமாண்டோப் படை உருவாக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்தது. இந்தப் படைக்கு போர்ஸ் ஒன் என்று பெயரிடப்படும் எனவும் அது அறிவித்தது.
தற்போது இந்தப் படை வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
போர்ஸ் ஒன் படைக்கான தொடக்கப் பயிற்சிகள் முடிவடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநில காவல்துறையிலிருந்து போர்ஸ் ஒன் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1600 இளம் காவலர்கள் போர்ஸ் ஒன்னில் சேர விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிலிருந்து 320 பேரை மட்டும் வடிகட்டி எடுத்தனர். பின்னர் அவர்களுக்கு பல்வேறு கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன.
அவற்றைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பலர் விலகவே தற்போது 150 பேர் மட்டும் இறுதிப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு புனேவில் உள்ள மாநில ரிசர்வ் போலீஸ் படை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.