பெட்ரோல் விலை உயர்வால் அதிர்ச்சி - காரை விற்று விட்டு குதிரையில் போகும் தொழிலதிபர்
பார்ப்பதற்கு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல தெரியும் இவரது செயல். ஆனால் குதிரை சவாரியால் பல லாபங்கள் தனக்கு ஏற்படுவதாகவும், இதுதான் பெஸ்ட் வாகனம் என்றும் பெருமையுடன் கூறுகிறார் இந்த தொழிலதிபர்.
அவரது பெயர் சஞ்சய் பாண்டே. நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர். விலை உயர்ந்த சொகுசுக் கார் ஒன்றை வைத்திருந்தார் சஞ்சய். ஆனால் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை ஏறிக் கொண்டே போவதால் காரை விற்று விட்டார்.
அதன் பின்னர் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு குதிரையை வாங்கினார். தற்போது அந்தக் குதிரையில்தான் தனது அலுவலகத்திற்கு தினசரி போய் வருகிறார் சஞ்சய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது அருமையக உள்ளது. பெட்ரோலுக்காக காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. பெட்ரோல் விலை உயருகிறதே என்று கவலைப்படத் தேவையில்லை. டயர் தேய்ந்து விட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. நம்மால் சுற்றுச்சூழல் மாசடைகிறதே என்று வருத்தப் படத் தேவையில்லை என்கிறார் சஞ்சய்.
குதிரைக்காக தினசரி 40 ரூபாய் மட்டும் செலவழிக்கிறாராம் சஞ்சய். குதிரைக்கான தீவணத்திற்காக இந்த செலவு. ஆனால் வழக்கமாக ஒரு நாளைக்கு பெட்ரோலுக்காக மட்டும் முன்பு ரூ. 150 வரை செலவிட நேரிட்டதாம்.
குதிரை சவாரியால் பணம் மிச்சமாவதோடு, திருப்திரமாகவும் போய் வர முடிகிறதாம்.