மட்டக்களப்பில் எல்டிடிஇயுடன் சண்டை - ராணுவ வீரர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான்குளம் பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். ராணுவ வீரர்களைச் சுட்ட விடுதலைப் புலி வீரர், பதில் தாக்குதலில் படுகாயமடைந்தார்.
காயமடைந்த அந்த வீரரை ராணுவம் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அறிவித்த பின்னர் நடந்துள்ள முதல் நேரடிச் சண்டை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைப் படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பின் தென்பகுதியில் உள்ள கிரான்குளம் பகுதியில் கடற்பாதையைப் பயன்படுத்தி நேற்று காலை தப்பிச் செல்ல முற்பட்டார்.
அவரது பெயர் மோகன் அல்லது நல்லதரத்திணம் மகேந்திரராஜா எனக் கூறப்படுகிறது. சிறிய படகு மூலம் மோகன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அதைப் பார்த்த ராணுவம், தடுத்து நிறுத்தியது.
பின்னர் மோகனைப் பிடிக்க அவர்கள் முயன்றபோது மோகன் மின்னல் வேகத்தில் ராணுவ வீரரின் துப்பாக்கியைப் பறித்து சரமாரியாக சுட்டார்.
இதில் ராணுவ வீரர் ஒருவர் அங்கேயே உயிரிழந்தார். இறந்த ராணுவ வீரரைக் காப்பாற்ற விரைந்த இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த ராணுவத்தினர் மோகனை சுற்றி வளைத்து சுட்டுள்ளனர். அப்போது மோகன் படுகாயமடைந்து விழுந்தார்.
இதையடுத்து அவரை மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குப் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் மூலம் எத்தனை விடுதலைப் புலிகள் அப்பகுதியில் உள்ளனர் என்பதை அறிவதற்காகவே மோகனை கொல்லாமல் காயப்படுத்தி ராணுவத்தினர் உயிருடன் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications