காதலிக்க மறுத்த மாணவி கொலை-ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்
விஜயவாடா: காதலிக்க மறுத்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவரை ஆட்டோ டிரைவர் கடத்தி சென்று கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்துக்கு அருகில் வசித்து வந்த ஏலியா என்பவரின் மகள் ஹெப்சிபா (20). இவர் நோவா என்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டில் இருந்து கல்லூரி வெகு தொலைவில் இருந்ததால் அவர் நேரு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்சில் செல்வது பழக்கம்.
வீட்டில் இருந்து பேருந்து நிலையத்துக்கு தினமும் லிங்கா ரெட்டி என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். ஹெப்சிபாவின் அழகில் மயங்கிய லிங்கா ரெட்டி ஒரு நாள் அவரிடம் பூங்கொத்து கொடுத்து அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், ஹெப்சிபா, ஆட்டோ டிரைவரின் விருப்பத்தை நிராகரித்து, அவரை கண்டபடி திட்டினார். மேலும், அவரது ஆட்டோவில் செல்வதை அன்றிலிருந்து தவிர்த்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி முதல் ஹெப்சிபாவை காணவில்லை. இதையடுத்து அவரது தந்தை மறுநாள் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் அமராவதி ரோடு அருகை கிருஷ்ணாயாபாலம் என்னும் இடத்தில் உள்ள ஒரு ஏரியில் சாக்குமூட்டைக்குள் ஒரு பெண்ணின் பிணம் இருப்பது தெரிய வந்தது.
போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றினர். அது ஹெப்சிபாவின் பிணம் தான் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். பின்னர் அவரது மொபைல் கைப்பற்றப்பட்டு அதிலிருந்த எண்களை வைத்து போலீசார், ஆட்டோ டிரைவர் லிங்கா ரெட்டியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த ஆட்டோ டிரைவர், ஹெப்சிபா கல்லூரியில் இருந்து திரும்பி வரும் போது அவரை நைசாக கடத்தி சென்று காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவரது உடலை சாக்குமூட்டையில் போட்டு கிருஷ்ணாயாபாலம் ஏரியில் போட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications