பட்ஜெட்: ரூ.10 லட்சம் கோடியை தாண்டிய செலவுகள்!
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
பட்ஜெட்-வரவும் செலவும்:
மொத்த செலவுகள்-ரூ. 10,20,838 கோடி
திட்டச் செலவுகள்-ரூ. 3,25,149 கோடி
திட்டமில்லா செலவுகள்- ரூ. 6,95,689 கோடி
கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி- ரூ. 2,25,511 கோடி
மானியங்களுக்கான செலவு- ரூ. 1,11,276 கோடி
வரிகள் மூலம் வருவாய்- ரூ. 6,41,079 கோடி
வரிகள் அல்லாத பிற வருவாய்- ரூ. 1,40,279 கோடி
வருமான பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும். திட்டமில்லா செலவுகள் இவ்வளவு தூரம் அதிகரித்ததற்குக் காரணங்கள் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கியது மற்றும் உணவுக்கான மானியத்தை அதிகரித்தது ஆகியவை.
மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து ரூ. 21,000 கோடி வரை கூடுதலாக கடன் வாங்கிக் கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 9 சதவீதத்திலிருந்து கடந்த ஆண்டு 6.7 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த இரு காலாண்டுகள் மிக மோசமாக இருந்தன. வளர்ச்சியை மீண்டும் 9 சதவீதத்துக்கு எட்டச் செய்ய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
நாட்டின் வளர்ச்சியில் தனியார் துறையின் பங்கு மகத்தானது. உலக அளவில் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பெருமளவில் பாதிக்கவில்லை. இந்த பாதிப்பை எதிர்கொள்ள சந்தையில் மத்திய அரசு ரூ. 1.86 லட்சம் கோடியை முதலீடு செய்தது. இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் காக்கப்பட்டது.
பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கான ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 10,800 கோடி. இது ரூ. 15,800 கோடியாக உயர்த்தப்படும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும்.
நாட்டின் எரிவாயு உற்பத்தியை இரு மடங்காக்க தேசிய எரிவாயு கிரிட் உருவாக்கப்படும்.
நதிகள், ஏரிகளை சுத்தப்படுத்த ரூ. 562 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.