ஜலதோஷத்திற்கு மத்தியிலும் விடாமல் பட்ஜெட் உரையை வாசித்த பிரணாப்
டெல்லி: இன்று லோக்சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் வாசிப்பின்போது அடிக்கடி கர்ச்சீப்பை எடுத்து மூக்கைத் துடைத்தபடி இருந்ததைப் பார்த்திருப்பீர்கள். பிரணாபுக்கு ஜலதோஷம். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் அவர்.
நீண்ட காலத்திற்குப் பின்னர் நிதியமைச்சராகியுள்ள பிரணாப் முகர்ஜி, 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதலாவது பட்ஜெட் உரையை இன்று வாசித்து முடித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ப.சிதம்பரம் பட்ஜெட்டை சமர்ப்பித்து வந்தார். மிகச் சிறந்த வக்கீல் என்பதால் ப.சிதம்பரத்தின் பட்ஜெட் உரை வாசிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.
பொருத்தமான ஏற்ற இறக்கங்களுடன் படு அழகாக பட்ஜெட் உரையை வாசிப்பார் அவர். ஆரம்பித்தபோது இருந்த வேகம், முடிக்கும் வரையிலும் குறையாமல் இருக்கும்.
மேலும் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோத பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. இதனால் படு தெம்பாக அலங்கார வார்த்தைகளைப் போட்டு வாசித்து முடிக்க வசதியாக இருந்தது.
அதற்காக பிரணாப் முகர்ஜி சிறப்பாக பட்ஜெட் உரையை வாசிக்கவில்லை என்று கூறி விட முடியாது. இன்று அவர் பட்ஜெட் உரையை வாசிக்கும்போது அடிக்கடி கர்ச்சீப்பை எடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டபடி இருந்தார். காரணம், அவருக்கு ஜலதோஷம்.
மேலும், பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள காலகட்டம், நிதி சிக்கல் விஸ்வரூபம் எடுத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நேரம். எனவே திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் பார்த்துப் பார்த்து அறிவிக்க வேண்டிய நிலைமை.
இப்படி பல தரப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியில் சேலையும் கிழியாமல் முள்ளும் கையில் படாமல் சேலையை பத்திரமாக எடுக்கும் வேலையை படு லாவகமாக முடித்துள்ளார் பிரணாப்.
பிரணாப் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியபோது பங்குச் சந்தையில் காளையின் பாய்ச்சல் படு வேகமாக இருந்தது. ஆனால் பட்ஜெட் போகப் போக, வீழ்ச்சிக்கு போய் விட்டது பங்குச் சந்தை. பட்ஜெட்டை அவர் வாசித்து முடித்தபோது கிட்டத்தட்ட 800 புள்ளிகள் வரை சரிந்திருந்தது சென்செக்ஸ்.
பங்குச்சந்தையின் எதிர்பார்ப்பை பாபு பிரணாபின் பட்ஜெட் பூர்த்தி செய்யாததே இதற்குக் காரணம்.
பங்குச்சந்தை பார்ட்டிகளுக்கு சாதகமாக பிரணாப் எதுவும் சொல்லவில்லை என்று அவர்கள் வருத்தப்பட்டாலும் கூட, தனி நபர்களுக்குச் சில சந்தோஷங்களை விட்டு வைத்திருந்தார் பிரணாப்.
வருமான வரிச் சலுகைகள், தொழில் துறையினருக்கு சில சலுகைகள், விவசாயிகள், மகளிர் என பல தரப்பினருக்கும் கொஞ்சம் கொஞ்சம் சந்தோஷம் இருந்தது பிரணாபின் பட்ஜெட்டில்.
இந்த பட்ஜெட் நடுத்தர வகுப்பினருக்கு ஓரளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில் தனது மூக்கையும் பார்த்துக் கொண்டு, நாட்டின் முகத்தையும் பூரிக்க வைக்கும் முயற்சியில், ஓரளவு வென்றுள்ளார் பிரணாப் என்றே சொல்ல வேண்டும்.