நீதிபதிக்கு மிரட்டல்: ராஜாவை நீக்க வேண்டும்-வைகோ
தூத்துக்குடி: மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ராஜா, நீதிபதியை மிரட்ட மற்றொரு அமைச்சரை தூண்டிவிட்டுள்ளார். இதனால் தற்போது ஒட்டுமொத்த கேபினட் குழுவின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பிரதமர் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து அந்த அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தூத்துக்குடியில் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ஜோயல் தலைமை வகித்தார். மதிமுக துணை பொது செயலாளர் நாசரேத் துரை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வைகோ பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சியினர் வெற்றியை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். இது கிடைத்த வெற்றியல்ல. வாங்கப்பட்ட வெற்றி. இது ஜனநாயகத்தை அழிக்கும் செயல்.
தற்போது மக்களுக்கு தேவை பொருளாதாரம்தான் என்பதை உணர்ந்து அதனை எதிர்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளன. ஒரு தொகுதிக்கு சுமார் ரூ. 30 கோடி வீதம் தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கு ரூ. 1200 கோடி செலவு செய்திருக்கிறார்கள். விருதுநகரில் ரூ. 50 கோடி செலவு செய்து என்னை தோற்கடித்துள்ளார்கள்.
மதிமுக ஓழுக்கத்திலும் கட்டுபாட்டிலும் சிறந்து விங்குகிறது. தேர்தல் தோல்வி நிரந்தரமானது அல்ல. தோல்விக்கு பிறகு நாங்கள் துவண்டு விடவில்லை. அப்படி இருந்திருந்தால் மதிமுக என்றோ சிதைத்திருக்கும். மீண்டும் உயிர்ந்து எழுந்து எழுச்சி பெறுவோம். தோற்றத்தை நாங்கள் நன்மையாக கருதுகிறோம்.
விருதுநகரில் எனது தோல்வி தமிழகம் முழுவதும் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு கட்சியை வளர்க்க வேண்டும்.
மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ராஜா, நீதிபதியை மிரட்ட மற்றொரு அமைச்சரை தூண்டிவிட்டுள்ளார். இதனால் தற்போது ஒட்டுமொத்த கேபினட் குழுவின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பிரதமர் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து அந்த அமைச்சர்களை நீக்க வேண்டும். இல்லையென்றால் மக்களுக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையின் மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் ஓரே தீர்வு. தனி ஈழம் தொடர்பான போர் இலங்கையில் மீண்டும் தொடரும். அதற்கு பிரபாகரனே மீண்டும் தலைமையேற்று நடத்துவார் என்றார் வைகோ.