ஏர் இந்தியா பங்குகளை விற்க முடிவு - நிர்வாகத்தை அடியோடு மாற்றவும் அரசு திட்டம்
டெல்லி: தன் வசம் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் பாதியை விற்று விட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிதி நெருக்கடியிலிருந்து 24 மாதங்களுக்குள் மீண்டு வர வேண்டும் எனவும் ஏர் இந்தியாவுக்கு அது கெடு விதித்துள்ளது.
அடுத்த 30 நாட்களில் ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் அடியோடு மாற்றப்படவுள்ளனர். புதிய தலைமை செயலதிகாரியும் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பை சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் படைத்த ஏழு சுயேச்ச இயக்குநர்கள் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது மத்திய அரசு.
கடந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 4000 கோடி இழப்பை சந்தித்தது. இதையடுத்து ஏர் இந்தியாவை மீட்டெடுக்க ரூ. 10 ஆயிரம் கோடி உதவி நிதி தேவை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பிரதமருக்குப் பரிந்துரைத்தது என்பது நினைவிருக்கலாம்.
நிதி நெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா ஊழியர்கள் 2 மணி நேரம் ஸ்டிரைக் செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அரவிந்த் ஜாதவ் கூறுகையி்ல், நிறுவனத்தின் நிதி நெருக்கடியை மனதில் கொண்டு அனைத்து விதமான கடுமையான நடவடிக்கைகளுக்கும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நிறுவனத்துடன் ஒத்துழைக்க வேண்டும். நிறுவனமே மூழ்கிப் போய் விடும் அளவுக்கு நிலைமை இன்னும் அபாயகரமாகி விடவில்லை.
இது அரசு நிறுவனம். எனவே தனியார் துறையில் செய்வதைப் போல ஊழியர்கள் யாரும் வீட்டுக்கு அனுப்பப்ட மாட்டார்கள் என்றார்.
ஏர் இந்தியாவை முற்றிலும் புதுப்பிக்கும் வகையிலும், ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் நிர்வாக மேல்மட்டத்தை அடியோடு மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் தற்போது அரசு இறங்கவுள்ளதால் விரைவில் ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கி 'டேக் ஆப்' ஆகும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications