பட்ஜெட்-ரயில்வே பட்ஜெட் மே. வங்கத்திற்கு கூடுதல் நிதி, திட்டங்கள்

சில நாட்களுக்கு முன்பு மமதா பானர்ஜி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அதேபோல பொது பட்ஜெட்டிலும், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏராளமான நிதி ஒதுக்கீடுகள், திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
மமதாவும், பிரணாபும் சேர்ந்து பட்ஜெட்டுகளை மேற்கு வங்க பட்ஜெட்டாக மாற்றி விட்டனர்.
பிரணாப் நேற்று அறிவித்த பட்ஜெட்டில், அய்லா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் கிளை முர்ஷிதாபாத்தில் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதை விட முக்கியமாக மாபெரும் ஜவுளிப் பூங்கா ஒன்றும் மேற்கு வங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முர்ஷிதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியிலிருந்துதான் பிரணாப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மமதா அறிவித்த பட்ஜெட்டில் ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை, 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல மெகா திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
மேலும், நான்கு நான் ஸ்டாப் ரயில்கள், ஐந்து உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள், கிட்டத்தட்ட 150 மாதிரி ரயில் நிலையங்கள், ஏராளமான புதிய ரயில்கள், புதிய ரயில் இணைப்புகள், நீட்டிப்புகள் என மேற்கு வங்கத்திற்கு அள்ளி வழங்கியிருந்தார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு 1984ம் ஆண்டு நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜியும், ரயில்வே அமைச்சராக கனி கான் செளத்ரியும் இருந்தனர். இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். தற்போதும், நிதியமைச்சரும், ரயில்வே அமைச்சரும் (பிரணாப் மற்றும் மம்தா பானர்ஜி) மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இவ்வளவு திட்டங்களையும், நிதிகளையும் தங்களது மாநிலத்திற்கு அள்ளிக் கொண்டு போய் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications