தனியார்மயமாக்கல்: சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம்-பிரணாப்
டெல்லி: நிலைமை சரியாகும் வரை அரசின் கட்டுப்பாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படும். சரியான நேரத்தில் மீண்டும் தனியார்மயமாக்கலைத் தொடர்வோம் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு முதல்முறையாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் பிரணாப் முகர்ஜி.
நேற்றைய பட்ஜெட் அறிவிப்புகளில், அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது இப்போதைக்கு நிறுத்தப்படுவதாகவும், பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்களை அரசே தனது முழுப் பொறுப்பிலும் வைத்திருக்கும் என்றும் தெரிவித்தார் இதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. 850 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தன.
இந்த நிலையில் இன்று பேட்டியளித்துள்ள பிரணாப் முகர்ஜி, அரசின் இந்த முடிவு தற்காலிகமானதே என்றும், உரிய நேரம் வரும்போது அரசு முதலீடு விலக்கல் (disinvestment) தொடரும் என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
அரசுத் துறை நிறுவனங்களில் அரசின் முதலீட்டை விலக்கிக் கொள்வது நிச்சயம் நடக்கும். ஆனால் இப்போதல்ல. அரசு தனது முதலீட்டை குறைத்துக் கொண்டு அதில் பொதுமக்களை (அதாவது தனியார் நிறுவனங்களை) பங்கேற்கச் செய்வதில் ஆர்வமாக உள்ளோம். எந்த அளவு குறைப்பது, எந்தெந்த நிறுவனங்களில் முதலீட்டைக் குறைப்பது போன்றவற்றை இனிமேல்தான் தீர்மானிப்போம்.
இப்போதைக்கு நிதி அமைச்சர் என்ற முறையில் என் கவனமெல்லாம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே. குறைந்தபட்சம் 9 சதவிகித வளர்ச்சியையாவது எட்ட வேண்டும். நாட்டில் இந்த ஆண்டு பருவமழை மட்டும் சரியாக அமைந்துவிட்டால், இந்த வளர்ச்சி சாத்தியமே.
உள்நாட்டு வருவாயைப் பெருக்க மத்திய அரசு கூடுதலாக ரூ.60000 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் தேவை அதிகரிக்கும். வர்த்தகம் சூடுபிடிக்கும். அந்நிய வர்த்தகம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள இந்தக் கட்டத்தில் அதைச் சரிகட்ட உள்நாட்டு வர்த்தகத்தை பெருக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அனைத்து மாநில அரசுகளின் தொழில் துறையும் முயற்சி செய்தால் இது சாத்தியமே. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளிடமும் நான் பேசி வருகிறேன், என்றார் பிரணாப் முகர்ஜி.












Click it and Unblock the Notifications