நக்சல் பாதிப்பு மாநில முதல்வர்கள் கூட்டம்-ப.சி. தகவல்
டெல்லி: நக்சலைட் அட்டகாசம் தலை விரித்தாடும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களின் கூட்டம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளிக்கையில், நக்சலைட் பிரச்சினை உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள், தத்தமது மாநிலங்களில் செயல்படும் நக்சலைட்டுகளை ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
முதல்வர்கள் கூட்டத்தின்போது நக்சலைட் அட்டகாசத்தை ஒழிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு முதல்வர்களிடம் விளக்கப்படும்.
நக்சலைட் பிரச்சினை கடந்த 2 மாதங்களில் மிகப் பெரிய கவலை அளிக்கும் அம்சமாக மாறியுள்ளது உண்மை.
இந்த அட்டகாசத்தை ஒழிக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளிநாடுகளிலிருந்து நக்சலைட்டுகளுக்கு பணம் வருவது தொடர்பாக போதிய, வலுவான ஆதாரங்கள் இதுவரை இல்லை.
வங்கிகளைக் கொள்ளையடித்தல், கடத்தி வைத்துப் பணம் கேட்டு மிரட்டுதல், உள்ளூர் மக்களின் ஆதரவு உள்ளிட்டவற்றின் மூலம் நமது நாட்டுக்குள்ளேயே அவர்கள் பணத்தை திரட்டிக் கொள்கின்றனர்.
காவல்துறையை நவீனப்படுத்த மாநிலங்களுக்கு ரூ. 1,250 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications