பொருளாதார மந்தம்: பணக்கார நாடுகளே காரணம்-மன்மோகன்
ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று இத்தாலி கிளம்பினார்.
தொழில்துறையில் முன்னேறிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, பிரான்சு, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பு ஜி 8.
இதன் 3 நாள் உச்சி மாநாடு இத்தாலியின் மலை நகரமான லா அக்யூலாவில் புதன்கிழமை தொடங்கி 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலக பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடி, பூமி வெப்பமயமாதல், எரிசக்தி, உணவு பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று இத்தாலி கிளம்பியுள்ளார்.
இந்த மாநாட்டைத் தொடர்ந்து இந்தியா, சீனா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகியவை அங்கம் வகிக்கும் ஜி -5 மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கிறார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவையும் பிரதமர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
இத்தாலி கிளம்பும் முன்பு பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
பொருளாதார நெருக்கடி...
வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம்தான் இன்றைய உலக பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கிய காரணம்.
இந்த நாடுகளின் பொருளாதார சீர்குலைவால் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதன் விளைவுகளை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக நமது ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவது, முதலீடுகள் வருவது ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல புவி தட்பவெப்ப மாற்றமும் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. இதற்கும் வளர்ந்த நாடுகளே முக்கிய காரணம். வளரும் நாடுள்தான் இதனால்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வளர்ந்த நாடுகளில் ப்பிடிக்கப்பட்டு வந்த தொழிற் செயல்பாடுகள் மற்றும் அதிக அளவிலான நுகர்வு, வாழ்க்கை முறை ஆகியவையே இன்றைய நிலைக்குக் காரணம்.
இந்த மாபெரும் வரலாற்று சிதைவுக்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும். புவித் தட்பவெப்ப மாற்றம் தொடர்பான சர்வதேச நடவடிக்கைகளில் இந்தியா தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளும் என்றார் சிங்.