லஞ்சம்: 2வது முறையாக சிக்கிய சார்பதிவாளர்-ரூ. 27,000 பறிமுதல்
நாகர்கோவில்: லஞ்சம் வழக்கில் கடந்த மூன்ற மாதத்துக்குள் இரண்டாவது முறையாக சிக்கியுள்ளார் இரணியல் பத்திர பதிவு சார்பதிவாளர். அவரிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ. 27 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இரணியல் பத்திர பதிவு அலுவலகத்தில் கடந்த 13-4-09 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் சார்பதிவாளராக இருந்த ராஜேந்திரனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.17 ஆயிரத்து 658யை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ராஜேந்திரன் மீது புகார் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி சுந்தரராஜூ தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை பணிமுடிந்து வீட்டுக்கு புறப்பட்ட ராஜேந்திரனை பிடித்து சோதனை போட்டனர்.
அப்போது அவரிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.10 ஆயிரத்து 500 சிக்கியது. இதனை தொடர்ந்து காரவிளையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
வீட்டிலிருந்த லஞ்ச பணம் ரூ.17 ஆயிரத்து 530 அவர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரணியல் பத்திரபதிவு அலுவலகத்தில் இரவு 12 மணி வரை விசாரணை நடைபெற்றது. கடந்த மூன்று மாதத்துக்குள் ஒரு அரசு அதிகாரி இரண்டாவது முறையாக லஞ்ச வழக்கில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.