சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்ததற்காக மனைவியை கொன்ற கணவர்!
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அடுத்தவர் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்ததற்காக தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரைக் கழுத்தை முறித்துக் கொலை செய்து விட்டார் ஒரு நபர்.
நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 60 கொலைகள் நடந்துள்ளன. அதாவது சராசரியாக மாதத்திற்கு பத்து கொலைகள் விழுகின்றன.
பழிக்குப் பழி வாங்குவது, கள்ளக்காதல், முன்விரோதம், திடீர் கோபத்தால் கொலை செய்வது என பல்வேறு காரணங்களுக்காக இந்த கொலைகள் நடந்துள்ளன.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அருகே இன்னொருவரின் சைக்கிளில் டபுள்ஸ வந்ததற்காக கோபப்பட்டு மனைவியைக் கொன்று விட்டார் ஒரு ஆத்திரக்கார நபர்.
அம்பை அருகே உள்ளது ஊர்க்காடு. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகாலட்சுமி. 3 குழந்தைகள் உள்ளனர். மகாலட்சுமி பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார். செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார் முருகன்.
சமீப காலமாக தனது மனைவியின் நடத்தை குறித்து முருகனுக்கு சந்தேகம் இரு்நதது. இதனால் அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஒரு கடைக்குப் பீடி கொடுக்கப் போன மகாலட்சுமி, அந்தக் கடைக்காரருடன் சைக்கிளில் வீட்டுக்கு வந்துள்ளார் போலும். இது முருகன் காதுகளுக்குப் போயுள்ளது.
படு கோபத்துடன் கிளம்பி வந்த முருகன், மனைவியுடன் சண்டை பிடித்துள்ளார். இரவு நெடு நேரம் சண்டை போட்ட பின்னர் தூங்கப் போயினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை எழுந்த முருகன், தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்தார்.
அதன் பின்னர் நேராக போலீஸில் போய் சரணடைந்தார்.