பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க தென்னிந்திய மில் சங்கம் கோரிக்கை
திருப்பூர்: ஜவுளி நிறுவனங்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை சீராக இருக்க வேண்டும் என்றால் மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என தென்னிந்திய மில் சங்கமான சைமா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சைமா சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்,
பனியன் உற்பத்திக்கு பயன்படுத்தும் நூல்கள் உற்பத்தி செய்வதில், நூற்றுக்கும் அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இவைகளுக்கு தேவையான பஞ்சு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இருப்பினும் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உற்பத்தியாகும் பருத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது தான். அதன் காரணமாக குறைவான விலைக்கு விவசாயிகளிடம் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு வெளிநாட்டு வியாபாரிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
ரூ. 21க்கு ஏற்றுமதி... ரூ. 27க்கு இறக்குமதி...
இந்தியாவில் ஒரு பேரல் பஞ்சு 21 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. அதே பஞ்சை நமது நூற்பாலை உரிமையாளர்கள் 27 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து, அமெரிக்கா, ஐரோப்பியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
இதனால் நூல் விலை அடிக்கடி உயர்கிறது, பனியன் மற்றும் பல்வேறு வகையான ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் விலை உயர்வுக்கு ஏற்ற வகையில் உற்பத்தி செய்யப்படும் ஆடை விலையை அடிக்கடி உயர்த்த முடியாது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய பருத்தி கழகம், பருத்தி விவசாயிகளுக்கும், நூற்பாலை உரிமையாளர்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பருத்தியை, நூற்பாலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்வதில் கடுமையான விதிமுறைகளை இந்த நிறுவனம் அமல்படுத்தி வருகிறது.
குறைந்தபட்சம் ஐந்து லட்சம் பேரல்களாவது ஒரே சமயத்தில் கொள்முதல் செய்தால் மட்டுமே விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. ஒரே சமயத்தில் நூற்பாலை உரிமையாளர்களும் இவ்வாறு கொள்முதல் செய்ய முடியாது.
இதனால், இந்த நிறுவனத்திடம் பருத்தி வாங்க முடிவதில்லை. எனவே, மத்திய அரசு பருத்தி பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.