சூடான விற்பனையில் பிரபாகரன் குறித்த புத்தகங்கள் சென்
பிரபாகரன் சகாப்தத்தை இலங்கை அரசு ஒழித்திருக்கலாம். சென்னையில் உள்ள புத்தக பதிப்பாளர்கள், பிரபாகரனுக்கு புத்துயிர் கொடுத்து அவரை தங்களது நூல்கள் மூலம் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழ வரலாறு குறித்தும், பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு குறித்தும் ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வெளியான சில நாட்களிலேயே பிரபாகரன் வாழ்வும், மரணமும் என்ற பெயரில் கிழக்குப் பதிப்பகம் ஒரு நூலை வெளியிட்டது. அந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
ஈழப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இதுவரை பிரபாகரன் குறித்து ஐந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அனைத்துமே பல ஆயிரக்கணக்கில் விற்பனையாகியுள்ளன. அத்தனை புத்தகங்களுக்கும் தற்போது மறு பிரதி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள முன்ணனி புத்தக விற்பனை நிலையங்களின் செல்புகளை இந்தப் புத்தகங்கள் நீக்கமற ஆக்கிரமித்துள்ளன.
பிரபாகரன் வாழ்வும், மரணமும் நூலை எழுதியவரான பா.ராகவன் கூறுகையில், எனது புத்தகத்திற்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் வாரத்திலேயே 1500 புத்தகங்கள் விற்பனையாகி விட்டன.
லேன்ட்மார்க் புத்தக விற்பனை மையத்தில் சிறப்பாக விற்பனையாகும் புத்தக வரிசையில் எனது நூலும் இடம் பெற்றுள்ளது. இந்த விற்பனையை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார்.
லேன்ட்மார்க் நிறுவன அதிகாரி சாலமோன் சாமுவேல் கூறுகையில், விற்பனை சிறப்பாக உள்ளது. பிரபாகரன் மறைவுக்குப் பின்னர் இதுவரை 180 பிரதிகளை விற்றுளளோம். இன்னும் சூடு குறையாமல் விற்பனை நடந்து வருகிறது என்றார்.
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கூறுகையில், போர் முடிவுக்கு வரும் தருவாயில்தான் நாங்கள் பிரபாகரன் குறித்த புத்தகத்தை வெளியிட முடிவு செய்தோம். மக்களிடையே பெரும் ஆர்வம் இருந்ததால் விற்பனை சிறப்பாக இருக்கும் என முடிவு செய்தோம். அதன்படியே எங்களது புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதே தலைப்பில் மேலும் சில புத்தகங்கள் வரவுள்ளன என்றார்.