ஏமாற்றிய போலீஸ்காரர்-கழட்டிவிட்ட காதலிகள்
சென்னை: சென்னையில் முதல் காதலியை விட்டுவிட்டு இரண்டாவது காதலியுடன் வாழ நினைத்த ஏமாற்று புத்தி போலீஸ்காரரை இரண்டு காதலிகளும் கழட்டிவிட்டு நல்ல பாடம் புகட்டினர்.
சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் சிவலிங்கம் (28) என்பவர் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கடந்த பிப்ரவரிமாதம் தான் இவர் இந்த பகுதி மாறுதலாகி வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு போலீஸ் காவல் தேவைப்படுவதாக கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து சிவலிங்கம் உள்ளிட்ட 6 போலீசார் அங்கு காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
காவல் வேலைக்கு வந்த சிவலிங்கம் காதல் லீலையில் இறங்கினார். அவருக்கும் பட்டாபிராமை சேர்ந்த ராணி என்ற மாணவிக்கும் காதல் ஊற்று பெருக்கெடுத்தது.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் ஒரு நாள் சிவலிங்கம் ராணியிடம் எனது வீட்டில் நமது காதலை பிரிக்க சதி செய்கிறார்கள். அதனால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்வோம் என கூறினார்.
இதையடுத்து அவர்கள் இருவரம் ராயபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த விஷயத்தை வெளியில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்து கொண்டு, வழக்கம் போல் தங்களது வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர்.
இந் நிலையில் சென்னை ஆயுதப்படையில் வேலை பார்க்கும் விஜயலட்சுமி என்னும் பெண் போலீஸ் நேற்று முன்தினம் (06.07.2009) புறநகர் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட்டை சந்தித்து, தானும் சிவலிங்கமும் காதலித்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஒரு கல்லூரி பெண்ணுடன் சுற்றுவதாகவும் புகார் மனு கொடுத்தார்.
புறநகர் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட் இது குறித்து விசாரிக்கும்படி கொரட்டூர் போலிசுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு ஏற்கனவே ஒரு காதலி இருப்பது ராணிக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த ராணி, சிவலிங்கத்திடம் தன்னை பார்க்க வர வேண்டாம் என கூறிவிட்டார்.
ஆனால், ராணியை சுற்றி சுற்றி வந்த சிவலிங்கம், ஒரு நாள் வீட்டுக்கு சென்று அவரது தந்தையிடம் எனக்கும், உங்கள் மகளுக்கும் ரகசிய திருமணம் முடிந்துவிட்டது. எனது மனைவியை அனுப்பி வையுங்கள் என வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து கோபமடைந்த ராணியின் தந்தை பட்டாபிராமம் போலீசில் புகார் செய்தார். அதே சமயத்தில் விஜயலட்சுமியும் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இரண்டு பெண்களை காதலித்த சிவலிங்கம் தற்போது தனது கோண புத்தியால் இருவராலும் கழட்டிவிடப்பட்டார். தற்போது விசாரணைக்காக கொரட்டூர், பட்டாபிராமம் என இரண்டு காவல் நிலையங்களையும் மாற்றி மாற்றி சுற்றி வருகிறார்.
மேலும், விசாரணைக்கு பின் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறை தண்டனையும் அளிக்கப்படும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications