லக்னோ ஈகோ பார்க்குக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி - மாயாவதி சிலை வைக்க தடை
லக்னோவில் உள்ள சிறைச்சாலையை இடித்து விட்டு அங்கு பிரமாண்டமான சுற்றுச்சூழல் பூங்கா, கான்ஷிராம் ஸ்தலம், அம்பேத்கர் ஸ்தலம் ஆகியவற்றை அமைக்க மாயாவதி திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் இதற்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்தத் திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. மாயாவதி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
இதை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது உ.பி. அரசு.
இதுதொடர்பாக உ.பி. அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், தலைநகர் லக்னோவுக்கு வெளியே அதி நவீன சிறைச்சாலையை அரசு கட்டவுள்ளது.
தற்போது உள்ள சிறை, மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. அங்கு 2010 கைதிகள் அடைத்து வைக்கலாம். ஆனால் 3632 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போது புதிதாக கட்டப்படவுள்ள சிறைச்சாலையில் 4660 பேரை தங்க வைக்க முடியும்.
மேலும், பழைய சிறைச்சாலை வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா மட்டுமே அமையும். வேறு எதுவும் இடம் பெறாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மட்டுமே அனுமதி தரப்படுகிறது. வேறு எந்த கட்டடமைப்பும் அங்கு இடம் பெறாது என்ற அரசின் உறுதிமொழியை ஏற்கிறோம் என்று கூறி இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.