கணவரை உதறிய பெண் காதலனுடன் சேர அனுமதி
சென்னை: கணவரை உதறி விட்டு காதலருடன் இணைந்த பெண், அவருடன் தொடர்ந்து சேர்ந்து வாழலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகள் நித்யா (25). இவருக்கும் சிவகங்கயை சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கும் கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தையும், 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சிதம்பரம் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 2 ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவாராம்.
திருமணத்திற்கு முன்பே கோவிந்தராஜ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார் நித்யா. ஆனால் இடையில் திருமணம் நடந்து விட்டதால் இந்தக் காதலில் இடையூறு ஏற்பட்டது.
ஆனால் சிதம்பரம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாலும், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வந்ததாலும், கோவிந்தராஜுடனான நட்பை புதுப்பித்துக் கொண்டார் நித்யா.
இந் நிலையில், சிதம்பரத்தை விட்டு விட்டு கோவிந்தராஜுடன் வாழ முடிவு செய்த நித்யா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
இதையடுத்து காளியப்பன் தனது மகளை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறும் சென்னை உயர்நீதி்மன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் முகோபாத்யாயா, ராஜஇளங்கோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அமைந்தகரை போலீசார், நித்யாவை நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினார்கள். நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது நித்யா, கூறுகையில் திருமணத்துக்கு முன்பே கோவிந்தராஜை காதலித்தேன். விஷயம் தெரிந்ததால் உறவினர் சிதம்பரத்துக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர்.
அவர் சிங்கப்பூரில் இருப்பதால் 2 ஆண்டுக்கு ஒரு முறைதான் வருகிறார். எனவே என் மனதுக்கு பிடித்த காதலன் கோவிந்தராஜுடன் வாழ விரும்புகிறேன் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன்படி,
நித்யா மேஜர் என்பதால் அவர் தனது விருப்பத்தின் பேரில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு. இதில் நாங்கள் தலையிட முடியாது. அவர் காதலனுடன் வாழ விரும்பினால் அவருடன் செல்லலாம் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications