தமிழ்நாடு டெலிகாமுக்கு நிதியுதவி!-ராசா
சென்னை: தமிழ்நாடு டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்ய புதிய திட்டம் தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் அ ராசா அறிவித்துள்ளார்.
இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் தமிழ்நாடு டெலிகம்யூனிகேஷன்ஸ். தொலைத் தொடர்புகத் துறைக்குத் தேவையான ஆப்டிகல் பைபர் கேபிள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்துக்கு சென்னையை அடுத்த மறைமலை நகர் மற்றும் வேலூருக்கு அருகே அரக்கோணத்தில் இரு தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றில் அரக்கோணம் யூனிட் நலிவடைந்த பிரிவாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இப்போது அது செயலிழந்த நிலையில் உள்ளது. ஆனால் மறைமலைநகர் யூனிட்டில் உற்பத்தி நடக்கிறது.
ஆப்டிகல் பைபர் கேபிளுக்குப் பெருகிவரும் தேவையைக் கருத்தில் கொண்டு, அரக்கோணம் பிரிவை மீண்டும் முழு அளவில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கத் தயாராகிறது மத்திய அரசு. இதற்காக மறு சீரமைப்பு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அ ராசா தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 30.67 சதவிகிதமும், தமிழக அரசுக்கு 29.49 சதவிகிதமும் பங்குகள் உள்ளன.