சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு வரலாம்!
சென்னை: லாரி வாடகையை உயர்த்தக் கோரி பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரலாம்.
சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இந்தியன் ஆயில் காப்பரேசன் எண்ணெய் கிடங்குகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் நகருக்குள்ளும் வெளியூர்களுக்கும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவை சப்ளை செய்யப்படுகின்றன.
இந்த லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய புதிய டெண்டர் விடப்பட்டிருந்தது. தற்போது டீசல் விலை உயர்ந்துள்ளதால், டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தரப்படும் வாடகையை இரு மடங்காக உயர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடரும் நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது.
லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் சென்னையிலும் அருகாமை நகர்களிலும் பங்குகளில் பெட்ரோல்-டீசல் தட்டுப்படு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.