For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை விவகாரத்தில் கபட நாடகம்-இ.முன்ணணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழருக்காக வாழ்கிறேன் என்று மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதி தன் குடும்ப உறுப்பினருக்கு மந்திரி பதவிகளை வாங்குவதற்காக காட்டிய முனைப்பில் கடுகளவுகூட இலங்கைத் தமிழருக்காக காட்டவில்லை என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இந்து முன்னணி அமைப்பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை தமிழருக்கு சம உரிமை பெற்றுத்தரக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூலை 13ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும். ஆர்ப்பாட்டம் முடிந்து இந்தியப் பிரதமருக்கு மாவட்ட கலெக்டர்கள் மூலமாக மகஜர் அனுப்பப்படும்.

இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகளை ஒடுக்கி விட்டது. தமிழர்கள் நிராதரவாக உள்னனர். வீடுகளை இழந்து, வேலை வாய்ப்புகளை இழந்து, சொல்லொனா துயரத்தில் மூழ்கியுள்ளனர். இலங்கை அரசு ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல் தமிழர்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர் பிரச்சனையை தங்களுடைய ஓட்டு வங்கி அரசியலுக்காக குழப்பி விட்டுவிட்டனர். தமிழ் மக்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக ஒவ்வொரு கட்சியும் தான் மட்டும் தான் தமிழர் பிரச்சனைக்காக போராடுகிறேன் என்று கூறிக்கொண்டு பல்வேறு கபட நாடகங்களை ஆடினார்கள்.

அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குதல் கொடுக்கவே இல்லை. விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்று தமிழ் பிரிவினைவாதிகளும் இதில் குளிர் காய்ந்தனர்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக எம்பிக்கள் ஒருவரும் பதவியை ஒரு மாதம் கூட துறக்கத் தயாராக இல்லை. தமிழக அமைச்சர்கள் இதற்காக பதவி விலகவில்லை.

தமிழருக்காக வாழ்கிறேன் என்று மார்தட்டிக் கொள்ளும் கருணாநிதி தன் குடும்ப உறுப்பினருக்கு மந்திரி பதவிகளை வாங்குவதற்காக காட்டிய முனைப்பில் கடுகளவுகூட இலங்கைத் தமிழருக்காக காட்டவில்லை.

சோனியா அரசும் விடுதலைப் புலிகளை பழிவாங்குவதற்காக இலங்கை அரசுக்கு உதவி செய்து விட்டது. மொத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் நாதியற்று தவிக்கும் நிலை உருவாகிவிட்டது. இக்கட்டான இந்த தருணத்தில் இலங்கைத் தமிழருக்கு சம உரிமை கோரி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் 13ம் தேதி நடத்துகிறது.

தனி மாநிலம், இந்தியா போல மத்திய மாநில ஆட்சி முறை, சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் ஆட்சி மொழி, கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

திருச்சியில் ராமகோபாலன் தலைமையிலும், சென்னையில் என்னுடைய தலைமையிலும் போராட்டம் நடைபெறும்.

இலங்கைத் தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X