சென்னையில் மேலும் 2 பேருக்கு 'ஸ்வைன் ப்ளூ'
சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த இரண்டு பேருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகத்தில் உள்ள 135 நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோயினால் சுமார் 94 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 429 பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய 34 வயதான பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஸ்வைன் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் சோதனைக்கு டெல்லி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஸ்வைன் ப்ளூ அறிகுறியுடன் இந்த மருத்துவமனையில் சுமார் 15 பேர் சோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் சென்னையை சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 164 பேருக்கு...
இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் மேலும் 7 பேருக்கு ஸ்வைன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார துரை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
நேற்று டெல்லியை சேர்ந்த மூவருக்கும், கோவா, ஹைதராபாத், பெங்களூரை சேர்ந்த தலா ஒருவருக்கும் ஸ்வைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் இதுவரை 1040 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 164 பேருக்கு ஸ்வைன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிகிச்சைக்கு பின் 114 பேர் வீடு திரும்பிவிட்டனர் என கூறியுள்ளது.