ஒபாமாவுடன் மன்மோகன் சந்திப்பு, எகிப்தில் கிலானியை சந்திப்பார்?
உலக பொருளாதார தேக்கம், தீவிரவாதம், பருவ நிலை மாற்றம் போன்றவை பற்றி இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.
முன்னதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் ஆகியோரையும் மன்மோகன் சிங் சந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய மன்மோகன் சிங்,
உலகளாவிய பொருளாதார சிக்கலால் வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வளரும் நாடுகளின் ஏழ்மை நிலையை ஒதுக்கி தள்ளிவிட்டு பருவ மாற்றம் குறித்த பிரச்சனைகளை கவனிக்க முடியாது.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் யுக்திகள் உருவாக்கப்படுவது அவசியம். பருவ மாற்றத்தை எதிர்கொள்வதில் தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
எனவே, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையுடன் இணைந்து பருவ நிலை மாற்றம் தொடர்பான தொழில்நுட்ப மேம்பாடு குறித்த மாநாட்டை இந்தியா நடத்தும்.
வரும் அக்டோபர் 22ம் தேதி டெல்லியில் இந்த மாநாடு நடக்கும் என்றார்.
எகிப்தில் மன்மோகன்-கிலானி சந்திப்பு?:
இந் நிலையில் அணி சேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு எகிப்து நாட்டின் சாம்-அல்-சேக் நகரில் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் பங்கேற்கின்றனர்.
அப்போது இருவரும் சந்தித்துப் பேசுவர் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்களும் இது தொடர்பாகப் பேசி தேதி-நேரத்தை முடிவு செய்வர் என்று தெரிகிறது.