அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட அமலாக்கத்தைக் கண்காணிக்க மன்மோகன் தலைமையில் கமிட்டி
டெல்லி: பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்றம் கொடுக்கும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களை விரைவாக அமல்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 12 பேர் கொண்ட அமைச்சரவைக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்த ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை விரைவாக அமல்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், பிரதமர் தலைமையில் ஒரு உயர் மட்ட கேபினட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மின்சாரம், ரயில்வே, சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், நீர்ப்பாசனம், வீட்டு வசதித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஊரக வீட்டு வசதித் துறை, நகர்ப்புற குடிசை மாற்று திட்டங்கள் உள்ளிட்டவற்றில், ரூ. 150 கோடிக்கும் மேலான அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்ளையும் இந்தக் கமிட்டி பரிசீலித்து முடிவுகளை எடுக்கும்.
இந்தக் கமிட்டியில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சரத் பவார், மமதா பானர்ஜி, சுஷில் குமார் ஷிண்டே, பரூக் அப்துல்லா, ஜெய்பால் ரெட்டி, கமல்நாத், ஏ.ராஜா, சி.பி.ஜோஷி, செல்ஜா, ஜி.கே.வாசன், பவன் குமார் பன்சால் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தவிர திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, அமைச்சர்கள் பிரபுல் படேல், பிருத்விராஜ் சவான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள்.