தமிழக மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகள்
சென்னை: தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகளை வழங்கவும், அவர்களது படகுகளைப் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சட்டசபையில் தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கூறுகையில், கடலோர மாநிலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுறுவல் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதால் இந்த நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக முன்னோடித் திட்டமாக தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள மீனவர்களுக்கு பயோமெட்ரிக் முறையிலான அடையாள அட்டைகளை வழங்கவும், படகுகளைப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு தமிழக அரசும் ஸ்மார்ட் கார்டுகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த கார்டுகளில், ஒவ்வொரு மீனவர் குறித்த அனைத்து விவரங்கள், குடும்பத்தினர் குறித்த விவரம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.
முதல் கட்டமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ரூ. 20 லட்சம் செலவில் இந்தத் திட்டம் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றார் சாமி.