உள்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: போலீஸ்காரர் ஒருவர் வழக்கில் சம்பளத்தை குறைக்க கூடாது என்ற தீர்ப்பாணையத்தின் உத்தரவை அமல்படுத்துங்கள். இல்லையென்றால் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி நீதிமன்றத்தில் வந்து ஆஜராகுங்கள் என தமிழக உள்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
மணிமுத்தாறு தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் பட்டாலியனில் இரண்டாம் கிரேடு போலீசாக இளங்கோவன் என்பவர் கடந்த 1986ல் பணி அமர்த்தப்பட்டார். கடந்த 2002ல் கான்ஸ்டபிளாக பணி உயர்வு தரப்பட்டு, அவரது சம்பளம் ரூ. 1200 உயர்த்தப்பட்டது.
அவர் கிரேடு 2 போலீசாக வேலை பார்த்து கொண்டிருந்த போது 1994ல் அவருக்கு சம்பளம் கூடுதலாக வழங்கப்பட்டிருப்பதாகவும், அதை அவரிடம் இருந்து திரும்ப பெறுமாறும் தமிழக அரசு உள்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் கடந்த 2004ல் தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தீர்ப்பாணையம் அவரது பதவி குறைக்கப்பட்டாலும், சம்பளத்தை குறைக்க கூடாது என தீர்ப்பளித்தது.
இதே தீர்ப்பை உறுதி செய்து கடந்த ஏப்ரல் 2008ல் சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. மேலும், அரசுக்கு அவரது சம்பளத்தை குறைக்க கூடாது என உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது அதை விசாரித்த நீதிபதி தர்மா ராவ் மற்றும் டிஎஸ் சிவஞானம் அடங்கிய பெஞ்ச் தங்களு தீர்ப்பில் கூறுகையில்,
தீர்ப்பாணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மாநில அரசுக்கு நான் வாரம் அவகாசம் தரப்படுகிறது. அதற்குள் நிறைவேற்றப்படவில்லை என்றால் உள்துறை செயலர் நீதிமன்றத்தில் வரும் 7ம் தேதி ஆஜராக வேண்டும் என்றனர்.