கொள்கைகளை செல்லரிக்க செய்யும் திமுக-வைகோ
காஞ்சீபுரம்: அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை திமுக செல்லரிக்கச் செய்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
காஞ்சீபுரத்தில் 11 இடங்களில் மதிமுக கல்வெட்டுகளை திறந்து வைத்தும், கட்சியின் கொடியை ஏற்றி வைத்தும் வைகோ பேசுகையில்,
கட்சிக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதைத் தாங்கும் சக்தியை அறிஞர் அண்ணா அளித்துள்ளார். அண்ணாவின் கொள்கைகள் மற்றும் லட்சியத்தை பின்பற்றும் கட்சியாக மதிமுக உள்ளது. ஆனால் திமுகவோ அண்ணா கொள்கைகளை செல்லரிக்கச் செய்து வருகிறது.
கடந்த தேர்தலில் 4 இடத்தில் போட்டியிட்ட நமது கட்சியினர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர். திமுகவினரின் பணபலம், அதிகார பலத்தையும் மீறி அதிமுக கூட்டணி 12 இடங்களில் வென்றது.
மதிமுகவை நாம் பலப்படுத்த வேண்டும். வரும் செப்டம்பர் 21ம் தேதி திருச்சியில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடக்கிறது. இதற்கு மதிமுகவினர் அணி திரண்டு வர வேண்டும்.
கட்சியை பலப்படுத்த நிர்வாகிகள் தீவிரமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். எதிரிகள் நம்மை கண்டு வியக்கும் வகையில் செயல்பட வேண்டும். உங்களின் கரம் பற்றி கேட்கிறேன். இந்தப் பணியில் உங்கள் செயல்பாடு சிறந்து இருக்க வேண்டும். நிலம் ஈரமாக இருந்தால்தான் விதைக்க முடியும். மதிமுகவை பலப்படுத்தினால்தான் எதிர்காலத்தில் நாம் வெற்றியடைய முடியும் என்றார் வைகோ.