பைக்கில் குற்றாலம் வந்த 3 வாலிபர்கள் பலி
குற்றாலம்: இரு பைக்குகளில் குற்றாலம் சென்ற மூன்று வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியாயினர்.
புதுக்குடி அரசு மரத்தடி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி. அதே பகுதியை சேர்ந்த உறவினர் செல்வம். இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் குற்றாலம் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கடையநல்லூரை அடுத்த சிங்கிலிப்பட்டி என்ற இடத்தில் பைக் வரும்போது குற்றாலம் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி உடல் நசுங்கி இறந்தார். படுகாயமடைந்த செல்வம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் மற்றொரு விபத்தில் தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் லிங்ககுமார். இவர் தனது நண்பர் தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த ஜெகதீசன் மகன் மகாராஜன் என்பவருடன் நேற்று குற்றாலத்திற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
ஆலங்குளம் அருகே மாறாந்தை விலக்கில் வரும்போது நிலை தடுமாறி ரோட்டோர மரத்தில் பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லிங்ககுமார் பலியானார். மகாராஜன் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.