வி.சி ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்-திருமா
செங்கல்பட்டு: விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள் அமைப்பு என்று திருமாவளவன் கூறினார்.
செங்கல்பட்டில் நடந்த ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,
தமிழக அரசியல் வரலாற்றில் அம்பேத்கர் வழியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றது, ஒட்டு மொத்த விடுதலைச் சிறுத்தைகளை நெஞ்சை நிமிர செய்துள்ளது. பெரியார், பிறக்காத மண்ணில் தலித்துகள் மிகப்பெரிய சக்தியாக விளங்குகின்றனர். ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் தலித்துகள் ஆள முடியாத சூழ்நிலை உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சிக்கு பின்னர், போராட்டத்தின் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் மகிழ்ச்சி இல்லை. விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் 2,797 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றோம்.
ஈழத்தில் நம் தமிழ் இனம் கொன்று ஒடுக்கப்பட்டனர். அந்த துக்கம் இன்னும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனை எண்ணி பார்க்கும்போது என் இதயம் குமுறுகிறது. தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் கையாலாகமல், கை கட்டி வேடிக்கை கும்பலாக இருக்கிறோம்.
ஈழத்தில் கடந்த 5 மாதங்களில் சொல்ல முடியாத சொற்களாலும் விமர்சிக்க முடியாத இன அழிப்பை ராஜபக்சே அரசு செய்துள்ளது.
யார் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தோமோ அவர்களே தமிழர்களை கொன்று குவிக்க உதவுகிறார்கள். நாம் விளம்பரத்திற்காக போராடவில்லை. உள்ளத்தில் ஏற்பட்ட காயம், கொந்தளிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் மறைமலை நகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.
எம்.ஜி.ஆர். காலத்திற்கு பிறகு அதிமுகவை வழி நடத்தும் ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு ஒருநாளாவது குரல் கொடுத்ததுண்டா?. தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழர்களுக்காக அவர் குரல் கொடுப்பதில் எந்த நியாயமும் இல்லை.
ஈழத் போர் முடிவு பெறவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள் என்றார் திருமா.