மும்பையிலும் மெட்ரோ இரும்புத் தூண் விழுந்தது
மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியான சாகினேதா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின்போது ஒரு இரும்புத் தூண் சரிந்து விழுந்தது.
டெல்லியைத் தொடர்ந்து மும்பையிலும் மெட்ரோ திட்டப் பணியின்போது நடந்த இந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காற்று காரணமாக இரும்புத் தூண் விழுந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
இதுகுறித்து மும்பை மெட்ரோ ஒன் திட்ட இயக்குநர் கே.பி.மகேஷ்வரி கூறுகையில், இது தற்காலிக இரும்புத் தூண்தான். கட்டுமானப் பணியின்போது இது வைக்கப்படுவது வழக்கம். பலத்த காற்றின் காரணமாக இது விழுந்து விட்டது.
இதனால் ஏற்பட்ட இடிபாடுகள் 3 மணி நேரத்தில் அகற்றப்பட்டு விட்டன. தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
அந்தேரி - கட்கோபர் இடையிலான பாலம் அமைக்கும் பணியின்போது இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.