கோட்டை முன் மறியல்-மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
சென்னை: கோட்டை முன் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 12 மாணவ, மாணவிகளுக்கு மண்டை பிளந்தது. இது தொடர்பாக 10 மாணவிகள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
சட்டசபையில் நாளை கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கவுள்ள நிலையில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி இந்திய மாணவர் கூட்டமைப்பினர் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந் நிலையில் செல்வா, கனகராஜ் தலைமையில் இந்த அமைப்பைச் சேர்ந்த 10 மாணவிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தடையை மீறி கோட்டை நோக்கி செல்ல முயன்றனர்.
ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக ஊர்வலகமா வந்த அவர்களை போலீசார் தடுத்தபோது மாணவர்கள் அடங்காமல் தொடர்ந்து முன்னேறினர்.
இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மாணவ, மாணவிகள் ஓடஓட விரட்டிச் சென்று அடித்தனர். இதில் 12 பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து 10 மாணவிகள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டத்தால் கடற்கரை சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.