நிதி பற்றாக்குறை-சமாளிக்க நோட்டுகள் அச்சடிப்பா?
அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு செலவிட பெரும் தொகையை கடனாகப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறை நிலவும் நிலையில் அதிகமான கடனை வாங்கினால், அது பெரும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து தனது கடன் சுமையை புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அரசு சமாளிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை பிரணாப் முகர்ஜி மறுத்துள்ளார். இதன்மூலம் அரசு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்காது என்பது தெளிவாகிறது. வெளியில் தான் கடன் வாங்கவுள்ளது.
முகர்ஜி கூறுகையில்,
இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அரசு ரூ. 2.41 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது. வெளிச் சந்தையில் இந்தக் கடன் திரட்டப்படும்.
இப்போது நிதிப் பற்றாக்குறை 6 சதவீதமாக உள்ளது. இதை 2011-12ம் நிதியாண்டில் 4 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமலுக்கு வர உள்ள சரக்கு, சேவை வரி மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும் என்றார்.