ஆசிரியர் முழங்கால் போடச் சொன்னால் விஷம் குடித்த மாணவி
சென்னை: ஆசிரியர் முழங்கால் போடச் சொன்னதால் அவமானமடைந்த மாணவி விஷம் குடித்தார். ஆசிரியர் மீது மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (40). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகள் பைரோஸ் பர்வீன் (16). புளியந்தோப்பில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் எப்போதும் பள்ளிக்கு தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வகுப்பாசிரியர் இவரை அடிக்கடி திட்டி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் மாணவி பைரோஸ் நேற்று முன்தினம் வழக்கம் போல் தாமதமாக பள்ளிக்கு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை வகுப்பாசிரியர் மாணவர்கள் மத்தியில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை பள்ளி வளாகத்தில் வெயிலில் 2 மணிநேரம் முழங்கால் போடும்படி கூறினார்.
இதனால் மனமுடைந்த பைரோஸ் வீட்டிற்கு வந்ததும், வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பைரோஸை அவரது உறவினர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த இஸ்மாயில் மகளிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, ஆசிரியர் தன்னை மாணவர்கள் மத்தியில் திட்டியதாகவும், ஆசிரியர் தன்னை மட்டுமே திட்டி வருவதாகவும் நேற்று பள்ளி வளாகத்தில் முழங்கால் போட வைத்ததாகவும் இதனால் எலி மருந்தை சாப்பிட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து இஸ்மாயில் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.