இன்னும் அணை கட்ட ஆரம்பிக்கலையே.. ஆந்திரா
ஹைதராபாத்: பாலாற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், இன்னும் அணை கட்டும் பணியை தொடங்கவில்லை என்றும் ஆந்திர அரசு கூறியுள்ளது.
சென்னை, வேலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் பாலாற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர அரசு அணை கட்டி வருவது குறித்து தமிழக சட்டசபையில் பிரச்சனை கிளப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதல்வர், ஆந்திராவின் இந்தச் செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், அணை கட்டும் நடவடிக்கையை ஆந்திர அரசு நிறுத்த வேண்டும் என்றும், இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இதை தமிழக அரசு சட்டரீதியாக எதிர் கொள்ளும் என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் லட்சுமையாவிடம் நிருபர்களிடம் பேசுகையில்,
பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவது தொடர்பாக இதுவரை சில வடிவமைப்புப் பணிகள் தான் செய்யப்பட்டுள்ளன. அதை தமிழக அரசுடனும் பகிர்ந்து கொண்டுள்ளோம். இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
அதே நேரத்தில் இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என்று எங்களால் சொல்ல முடியும்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை ஆந்திரா இன்னும் தொடங்கவில்லை என்பதால், இதில் இப்போது எந்த சர்ச்சையும் இல்லை.
அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்து இருக்கிறோம். எனவே அங்கு கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.
தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தல்..
இந் நிலையில் இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கிளப்பினர்.
அதிமுக எம்பி தம்பிதுரை மக்களவையில் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டுவிட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு அணை கட்டி வருவதையும் தடுக்க வேண்டும் என்றார்.
அதே போல திமுக, அதிமுக எம்பிக்கள் காவிரிப் பிரச்சனையையும் கிளப்பினர். உரிய நேரத்தில் கர்நாடகம் நீரைத் திறந்துவிடாமல் இருந்ததை சுட்டிக் காட்டினர்.
இப்போது மழையால் அணைகள் நிறைந்த பின்னர் அணைகளைக் காப்பாற்றிக் கொள்ள கர்நாடகம் நீரைத் திறந்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.