மின்வெட்டு-அமேதி விரைகிறார் ராகுல் காந்தி
டெல்லி: மின்வெட்டுப் பிரச்சினையைக் கண்டித்து அமேதியில் மக்கள் பெரும் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அமேதி எம்.பியுமான ராகுல் காந்தி சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார்.
அமேதி தொகுதியில் கடும் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் கொதிப்படைந்து பல்வேறு போராட்டங்களில் குதித்துள்ளனர். இது சில இடங்களில் வன்முறையாகவும் மாறியுள்ளது.
இதையடுத்து நாளை அமேதிக்குச் செல்கிறார் ராகுல் காந்தி. இதை அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒரு நாள் பயணமாக அமேதி செல்லும் ராகுல் காந்தி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், தேர்தல் ஏஜென்டுகளை சந்தித்துப் பேசவுள்ளார்.
சலோன், ஜெகதீஷ்பூர், திலாய், கெளரிகஞ்ச், அமேதி ஆகிய இடங்களில் கட்சித் தொண்டர்களையும் அவர் சந்திக்கிறார்.
மேலும், மின்வெட்டைக் கண்டித்து ஜூலை 13ம் தேதி சாலை மறியல் நடத்தி போலீஸாரின் தடியடியில் சிக்கி காயமடைந்தவர்களையும் அவர் சந்திக்கிறார்.