காதலரால் கைவிடப்பட்ட வழக்கு- ஆஸி. தமிழ் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை
சிட்னியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரது மகள் கவிதா. இவர்களுக்கு சொந்த ஊர் நெல்லையாகும்.
கவிதா காமன்வெல்த் வங்கியில் பணியாற்றி வருகிறார். அதே சிட்னியில், என்ஜீனியராக வேலை பார்த்து வந்தவர் கார்த்திக் தியோடர். இவர் திருச்சியைச் சேர்ந்தவர்.
இருவரும் காதலித்தனர். கவிதாவின் பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பின்னர் குடித்தனமும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென கார்த்திக், தனது வீட்டில் பார்த்த பெண்ணை மணக்க முடிவு செய்து திருச்சிக்கு வந்தார். இதை அறிந்த கவிதா, பின்னாலேயே துரத்த வந்து போலீஸில் புகார் கொடுத்து கல்யாணத்தை நிறுத்தி விட்டார்.
கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருச்சி போலீஸார், கார்த்திக், அவரது தாயார் இசபெல்லா, சகோதரி செல்வி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
தன்னுடன் கார்த்திக் குடும்பம் நடத்தியுள்ளார் என்று கவிதா கூறியுள்ளதால், இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்கு திருச்சி கோர்ட் காவல்துறைக்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்று கவிதாவுக்கு கி.ஆ.பெ. அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது.
இன்று கார்த்திக் தியோடருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும்.