சூரிய கிரகணம் பார்க்க சிறந்த இடம் பிகார்-நாஸா!
ஜூலை 22ம் தேதி முழு சூரிய கிரகணம் வருகிறது. அன்றைய தினம் சுனாமி வரும் என்று ஒரு குரூப் மெயில்களை அனுப்பியும், எஸ்.எம்.எஸ்களை அனுப்பியும் பீதி ஏற்படுத்தி வருகிறது.
இந் நிலையில், அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள், தரிகானாவில்தான் சூரிய கிரகணம் நீண்ட நேரம் இருக்கும் என்று கூறியுள்ளனர்.
பாட்னாவிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் தரிகானா உள்ளது. இங்கு கடந்த 2 ஆண்டுகளாக நாசா விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அதன் இறுதியில் இங்குதான் சூரிய கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
22ம் தேதி சூரிய கிரகணம் காலை 5.29 மணிக்கு ஆரம்பித்து 6.39 மணிக்கு முடிவடையும். இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரிய கிரகணம் இதுதான்.
இந்தியாவில் குஜராத், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களி்ல் சூரிய கிரகணம் நன்கு தெரியுமாம். அதாவது இந்த மாநிலங்களில் 200 கிலோமீட்டர் அகலத்திலான நிழலைக் காண முடியும்.
அதேபோல சீனா, ஜப்பானிலும் சூரிய கிரகணம் நன்கு தெரியும்.
தரிகானாவில் உள்ள சூரியக் கோவிலைச் சுற்றிலும் சூரிய கிரகணம் மிக தீவிரமாக காணப்படுமாம்.
சூரிய கிரகணம் முழுமையாக நிலவும் பகுதியாக தரிகானாவை இப்போதுதான் நாசா கண்டுபிடித்துள்ளது. ஆனால் 6வது நூற்றாண்டிலேயே ஆரியபட்டர் தரிகானாவை வானியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதைக் கண்டுபிடித்து விட்டார். இங்குள்ள சூரியக் கோவிலில் தனது வானியல் தொலைநோக்கியை வைத்து ஆய்வும் செய்து வந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரிகானாதான் சூரிய கிரகணத்தை சிறப்பாக பார்க்க முடியும் என்று நாசா கூறியுள்ளதால் அங்கு ஏராளமான மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தரிகானாவில் தங்கும் விடுதிகளோ, ஹோட்டல்களோ இல்லாததால் அனைவரும் பாட்னாவில்தான் தங்கியிருந்து தரிகானா செல்ல முடியும்.
இருப்பினும் தரிகானாவுக்கு வரும் மக்களுக்கு பல்வேறு வசதிகளைச் செய்ய மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளது. தற்காலிக குடில்கள் அங்கு அமைக்கப்படவுள்ளன. வாகன வசதிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.