ரீட்டாவை மன்னிக்க மாட்டேன்-மாயா ஆவேசம்

ரீட்டா விவகாரம் குறித்து இன்று முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசினார் மாயாவதி. அப்போது அவர் ஆவேசமாக காணப்பட்டார்.
மாயாவதி பேசுகையில், ரீட்டா பகுகுணா பேசிய தரக்குறைவான பேச்சு தொடர்பாக இதுவரை காங்கிரஸ் மேலிடம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரீட்டாவின் பேச்சுக்காக சோனியா காந்தி இதுவரை மன்னிப்பு கேட்கவே இல்லை.
இதன் மூலம் சோனியா சொல்லித்தான் ரீட்டா பேசியிருப்பாரோ என்ற எண்ணம் எழுகிறது.
எங்களது கட்சி எம்.பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபாவை முடக்கும் செயலில் ஈடுபட மாட்டார்கள். ரீட்டா மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும்.
வருண் காந்தியைப் போல ரீட்டாவும் ஜாமீனில் வெளியே வரலாம். ஆனால் அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
பகுஜன் சமாஜ் கட்சியினரை பலவீனமானவர்கள் என்று காங்கிரஸ் கட்சி நினைத்து விடக் கூடாது. நான் மட்டும் புதன்கிழமை இரவு பகுஜன் சமாஜ் கட்சியினரை தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால் ஒரு காங்கிரஸ் தொண்டர் கூட வெளியில் நடமாடியிருக்க முடியாது.
எனது கட்சியினர் யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன் என்றார் மாயாவதி.
ரீட்டா பேசியது என்ன?..
முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்.பியுமான அசாருதீனின் மொராதாபாத் தொகுதியில் ரீட்டா பகுகுணா ஆவேசமாக பேசியது இன்று காங்கிரஸ் கட்சியை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
அப்படி என்னதான் பேசினார் ரீட்டா...?
மொராதாபாத்தில் நடந்த மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ரீட்டா, கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு உ.பி. அரசு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்கியதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கற்பழிப்புக்குள்ளான ஒரு பெண்ணின் மன வலி, உடல் ரீதியான சித்திரவதைக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமானதென்று மாயாவதி நினைத்தால், நான் மாயாவதிக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று மகா கேவலமாகப் பேசினார் ரீட்டா.
ரீட்டாவுக்காக போராட்டம்-அஸார் கைது:
இந் நிலையில் ரீட்டா பகுகுணா ஜோஷியின் வீட்டை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி. அஸாருதீன் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸார் பேரணி நடத்தி கைதாகினர்.
தனது தொகுதியான மொராதாபாத்தில் காங்கிரஸ் கட்சியினரைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார் அஸாருதீன். ரீட்டாவின் கைதையும், அவரது வீட்டை எரித்த செயலையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துக் கொண்ட பின்னர் அஸாருதீன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாகக் கிளம்பிநார். இதையடுத்து போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications