யார் ஆட்சியில் குற்றம் அதிகம்? - சட்டசபையில் திமுக, அதிமுக மோதல்
சட்டமன்றத்தில் இன்று தீயணைப்பு, மதுவிலக்கு, காவல் துறை மானியக் கோரிக்கைகளை முதல்வர் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இதன் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், எம்ஜிஆர் ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் காவல் துறை சிறப்பாக செயல்பட்டது. ஆனால் இப்போது காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு மாநிலம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன.
தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அரசாங்கமே தனது கொள்கை விளக்க குறிப்பேட்டில் பட்டியலிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி, காவல் துறையின் ஈரல் கெட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் இப்போது காவல் துறையின் இதயமே கெட்டு விட்டது. அதனை சரி செய்ய வேண்டும்.
முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் இந்த அரசாங்கம் ஏன் அப்பீலுக்கு செல்லவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, எந்த வழக்கை அப்பீலுக்கு எடுத்துக் கொள்வது, எந்த வழக்கை கைவிடுவது என்பது அரசு எடுக்கும் முடிவு என்றார்.
தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றஞ்சாட்டினார். ஆனால் அதனை அமைச்சர் எ.வ.வேலு மறுத்தார்.
இதனையடுத்து பேசிய வைத்திலிங்கம், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல குற்றச்செயல்களை பட்டியலிட்டு, "குறைந்தபட்சம் மதுரையில் துணை முதல்வரை கத்தியால் குத்த வந்தவர் யார்? என்றாவது கண்டுபிடிக்க வேண்டும்; புழல் சிறையில் கஞ்சா, மது கடத்தல் அதிகரித்து ஒரு கொலையே நடந்துள்ளது. சிறைச் சாலைகள் எல்லாம் கொலை, கொள்ளை கூடாரங்களாக மாறி வருகின்றன.
திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் வந்து விடுகிறது. ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் குமார் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார் என்று திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திமுக உறுப்பினர் ராஜேந்திரன், அதிமுக ஆட்சிக் காலத்தில் என்னென்ன குற்றச் செயல்கள் நடைபெற்றன என்று பட்டியலிட்டார்.
ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சுப்பிரமணியசாமிக்கு அளிக்கப்பட்ட ஆபாச வரவேற்பு, வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து குரலெழுப்பிய அதிமுக எம்எல்ஏக்கள், இதையெல்லாம் திமுக உறுப்பினர் எந்த ஆதாரத்தை வைத்து கூறுகிறார் என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஸ்டாலின், அதிமுக உறுப்பினர் எந்த ஆதாரத்தை வைத்து திமுக ஆட்சியின் மீது குற்றம் சுமத்தினாரோ அதே ஆதாரங்களின் அடிப்படையில்தான் திமுக உறுப்பினரும் பேசுகிறார் என்றார்.
அதிமுக ஆட்சி என்று குறிப்பிட்டு சொல்வதுதான் அவர்களுக்கு வருத்தம் என்றால் அதனை கடந்த ஆட்சி என்று திமுக உறுப்பினர் சுட்டிக் காட்டலாம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராஜேந்திரன், செரீனா மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களையும் சுட்டிக்காட்டி அதிமுக ஆட்சிக்கு எதிராக குற்றஞ்சாட்டி பேசினார்.
இதற்கு மீண்டும் அதிமுகவினர் ஆட்சேப குரல் எழுப்பினார்கள். அவர்களுக்குப் போட்டியாக திமுக உறுப்பினர்களும் குரலெழுப்பினார்கள்.
இரு தரப்பு உறுப்பினர்களும் மாறி மாறி வாக்குவாதம் புரிந்ததால் சபையில் பெரும் அமளியும், கூச்சல் குழப்பமுமாக இருந்தது.