இடைத் தேர்தல் - திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: அன்பழகன்
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் வரும் 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்களில் விண்ணப்ப மனுக்களை வழங்கலாம் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேலைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.
முதல் நபராக திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகின்றீர்களோ அந்த தொகுதிக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வரும் 19, 20 ஆகிய நாட்களில் மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரம். விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.500 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். வரும் 22-ம் தேதி காலை 10 மணி முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.