மதுரையில் போஸ்டர் ஒட்ட, பேனர் வைக்க தடை
மதுரை: மதுரையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்ட, விளம்பர போர்டுகள் வைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் போஸ்டர்கள் ஒட்ட, விளம்பர போர்டுகள் வைக்க சென்னை மாநகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது.
இது போன்ற சட்டத்தை மதுரையிலும் அமல்படுத்த வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, குறிப்பிட்ட பகுதியில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, மீனாட்சி அம்மன் கோயில், சித்திரை, மாசி, ஆவணி மூல வீதிகள், வெளி வீதிகள், அழகர் கோவில் ரோடு, பஸ் ஸ்டாண்டுகள், நிழற்குடைகள், பாலங்கள், காமராஜர் சாலை, தமுக்கம் மைதானம், காந்தி மியூசியம் ரோடு, கே.கே.நகர் 80 அடி ரோடு, அண்ணாநகர் 100 அடி ரோடு பனகல் சாலை, போக்குவரத்து திட்டுகள், மாநகராட்சி அலுவலகங்கள், நீரேற்று நிலையங்கள், மருத்துவமனைகள், மின் கம்பங்கள், பள்ளி, அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களின் கட்டடங்கள் ஆகிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டவும் மற்றும் விளம்பர போர்டுகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறுவோருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் .
இந்த சட்டம் ஆகஸ்ட் முதல் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இதனையடுத்து, மதுரை மாநகரின் அழகுக்கு பெரிதும் தடையாக இருந்த போஸ்டர் கலாச்சாரம்
முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், 'நடமாடும் இலக்கியமே, நாடாளும் இலக்கணமே' என்று எதை எடுத்தாலும் போஸ்டர் ஒட்டிக் கொண்டாடும் சில மதுரைவாசிகள் இந்தத் தடையை எப்படி சமாளிக்கப் போகிறார்களோ...