அகதிகளை திருப்பி அனுப்ப மாட்டோம்-தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். அந்த முயற்சியில் மத்திய அரசோ, மாநில அரசோ ஈடுபடவில்லை என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறினார்.
சட்டசபையில் பொதுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் கருணாநிதியின் சார்பில் அமைச்சர் அன்பழகன் பதில் அளித்தார். அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். அனுப்பும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. திருப்பி அனுப்பும் முயற்சியில் மத்திய அரசோ, மாநில அரசோ ஈடுபடவில்லை.
அதே நேரத்தில் திரும்பி செல்ல விரும்புவர்களின் கோரிக்கை ஏற்கப்படும். சொந்த நாட்டில் உறவினர்களுடன் வாழ விரும்புகிறவர்களை தடுக்க மாட்டோம்.
இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் படும் துன்பங்களை கருத்தில் கொண்டு ரூ. 16 கோடி செலவில் வசதிகள் செய்யப்பட்டன. கட்டிடங்களை சீரமைக்க ரூ. 5 கோடி செலவிடப்பட்டது. இந்த ஆண்டு இலங்கை அகதிகளுக்காக ரூ. 55.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் துன்பப்படும் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள இந்தியத் தூதரக கண்காணிப்புடன் செஞ்சிலுவை சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் சிங்கள அரசு எந்தவிதத்திலும் தலையிடவில்லை என்று எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்ற மத்திய அரசு 4 நிபுணர்கள் குழுவை அனுப்பவுள்ளது. மத்திய அரசு வழங்கிய ரூ. 500 கோடி உதவியும் முறைப்படி இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும் மத்திய அரசு உதவிகளை செய்து வருகிறது. இதற்காக துருப்பிடிக்காத இரும்புத் தகடுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதையெல்லாம் ஒரு தகவலுக்காக சொல்கிறேனே தவிர இதன்மூலம் அந்தத் தமிழர்கள் துன்பகங்களை எல்லாம் துடைத்துவிட்டதாகச் சொல்லவில்லை.
நம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்சம் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறோம். அங்குள்ள தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க முடியுமே தவிர அவர்களுக்கு கண்ணீரே வராத அளவுக்குச் செய்யும் சக்தி நமக்கு இல்லை.
ஈழத் தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்லூரியி்ல் இடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். முதல்வருடன் இது குறித்துப் பேசி முடிவு செய்யப்படும் என்றார் அன்பழகன்.
அகதிகளுக்காக ரூ. 44.34 கோடி செலவு:
நேற்று சட்டமன்றத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 115 அகதிகள் முகாம்களில் 19 ஆயிரத்து 705 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 451 தமிழர்கள் வசிக்கின்றனர். மொத்தம் 26 மாவட்டங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன.
1983ம் ஆண்டு முதல் 87 வரை முதல் கட்டமாகவும், 1989ம் ஆண்டு முதல் 91 வரை 2வது கட்டமாகவும், 1996 முதல் 2003 வரை மூன்றாவது கட்டமாகவும், 2006ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல் தற்போது வரை நான்காவது கட்டமாகவும் தமிழகத்திற்கு அகதிகள் வந்துள்ளனர்.
இலங்கைத் தமிழ் அகதிகள் நலனுக்காக ரூ. 16 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.