தமிழகத்திற்கு 1,685 முறை வந்துபோன மத்திய அமைச்சர்கள்
தமிழக அரசின் பொதுத்துறை கொள்கைக் குறிப்பை தாக்கல் செய்து அவர் பேசுகையில், தமிழகத்திற்கு அதிக அளவாக மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டு வந்துள்ளனர். மொத்தம் 1,685 முறை அவர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்றார்.
தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர்களாக இருந்த 13 பேரும் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) தமிழகம் வந்து சென்றுள்ளனர்.
தமிழகத்திற்கு வந்த மத்திய அமைச்சர்களில் 80 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் என்று தெரிகிறது. இவர்களின் வருகை சராசரியைப் பார்த்தால் வாரத்திற்கு 2 முறை அல்லது வருடத்திற்கு 100 முறைக்கும் மேல் தமிழகம் வந்துள்ளனர்.
இவர்கள் டெல்லியிலிருந்து வந்து திரும்பிச் செல்வதற்கான செலவாக ரூ. 84 லட்சத்து 25 ஆயிரம் ஆகியிருக்கிறது. இந்த செலவை மத்திய அரசுதான் ஏற்றுள்ளது.
மத்திய அமைச்சர்கள் ஒரு மாநிலத்திற்கு வந்தால் அவர்களை ஓய்வு விடுதியில் தங்க வைப்பது, வாகன வசதி செய்து தருவது மாநில அரசின் கடமையாகும் என்பதால் இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுள்ளது.
அன்பழகன் தொடர்ந்து கூறுகையில்,
அதற்கு அடுத்தபடியாக மத்திய அரசு அமைத்த பல்வேறு கமிஷன்களைச் சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் 566 முறை வந்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் 3 முறையும், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் தலா 2 முறையும் வந்துள்ளனர்.
வெளிநாட்டுப் பிரமுகர்கள் 10 முறை வந்துள்ளனர். பிற மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் 148 முறை வந்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட், உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகள் 147 முறையும், பிற மாநில அமைச்சர்கள், மத்திய அரசுச் செயலாளர்கள் மொத்தம் 587 முறை வந்துள்ளனர்.
26 முறை வந்த கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 26 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.
மக்களவை தேர்தல் செலவு ரூ. 70 கோடி:
அதே போல கடந்த மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அரசின் பொதுத்துறை ரூ.70.98 கோடி செலவிட்டுள்ளது. இந்தத் தொகையை மத்திய அரசு வழங்கிவிடும்.
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்காக ரூ. 3.97 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பாதித் தொகையை மத்திய அரசு வழங்கிவிடும் என்றார்.