For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரும் மழை - வால்பாறையில் வெள்ளம் - வீடுகளில் தண்ணீர் புகுந்தது

By Staff
Google Oneindia Tamil News

வால்பாறை: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் பலத்த மழையால் வால்பாறை பகுதி முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள், கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. குறிப்பாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளிக் காற்றுடன், கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாழைத்தோட்ட ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, 250க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மழை நீர் புகுந்துள்ளது. 20 வீடுகள் மீது மண் சரிந்து உள்ளது.

வால்பாறை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் 15 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. கவர்க்கல் எஸ்டேட் அருகே ரோட்டில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் போக்குவரத்து முடங்கியது.

இதனால் சுற்றுலா பயணிகள், பஸ் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பயணிகள் தாங்கள் வந்த பஸ், வாகனங்களில் இரவு முழுவதும் பொழுதை கழித்தனர். இதனை அடுத்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினர் ராட்சத பாறையை அகற்றினர். அதன் பின்னர் நிலைமை சரியானது.

வால்பாறை பெரியார் நகரில் ராட்சத மரம் வேரோடு சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வால்பாறை அரசு போக்குவரத்து கழக டெப்போவில் தண்ணீர் புகுந்து உள்ளதால் அரசு பஸ்கள் அனைத்தும் டெப்போவிற்குள் செல்லாமல் மேடான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

கன மழையால் வால்பாறை நகரம் வெள்ளத்தில் மிதப்பது போல காட்சி அளிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால், கோவையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் மலைபகுதியில் இருந்து உருவாகும் நொய்யல் ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சித்திரைச்சாவடி தடுப்பு அணையில் மூன்றரை அடி உயரத்துக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கூடலூர்-கோழிக்கோடு சாலையில் 4 வீடுகள் சேதம் அடைந்தது. தொரப்பள்ளி, இருவயல் பகுதியில் உள்ள சுமார் 30 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

828 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

மேட்டுப்பாளையம் பகுதியில் பில்லூர் அணை நிரம்பி, பவானி ஆற்றில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் அந்த பகுதியிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்று ஓர பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X