இடைத் தேர்தல்-அதிமுக கூட்டணி புறக்கணிப்பா?

இளையான்குடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த ராஜகண்ணப்பன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றர். இதனால் இளையான்குடி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கிறது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்வாக இருந்த மு.கண்ணப்பனும், கம்பம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ராமகிருஷ்ணனும் மதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு சென்றனர். இருவரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததால் இடைத் தேர்தல் நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி (இங்கு தான் ஜெயலலிதா ஒருமுறை தோற்றார்) அதிமுக எம்எல்ஏவாக இருந்த தம்பிதுரை கடந்த மக்களவைத் தேர்தலில் கரூரில் போட்டியிட்டு வெனறார். இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 5ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது.
வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க கட்சிகள் தீவிரமாகியுள்ளன.
போட்டியிட விரும்புவோரிடமிருந்து 19 மற்றும் 20ம் தேதிகளில் திமுக விண்ணப்ப மனுக்களை பெறவுள்ளது. கம்பம், பர்கூர், இளையான்குடியில் திமுக போட்டியிடும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தை அங்கேயே கூட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள விவேக் ஹோட்டலில் இந்த செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.
சோனியாவுடன் தங்கபாலு சந்திப்பு:
இன்று டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இடைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து விவாதித்தார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அந்தக் கட்சியே வேட்பாளர்கள நிறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல தேமுதிக தலைவர் விஜய்காந்தும் தனது கட்சியினருடன் ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டார்.
ஆனால், பாமகவோ இடைத் தேர்தலையே புறக்கணிக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவை எடுக்குமாறு அதிமுகவிடமும் பாமக கோரியுள்ளது.
நேற்று நிருபர்களிடம் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துத் தான் திமுக மக்களவைத் தேர்தலில் வென்றது. நடைபெற உள்ள 5 இடைத் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றது என்று இப்போதே அவர்கள் எழுதிக் கொள்ளலாம் என்றார்.
ஆனால், அதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.
கடந்த வாரம் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், இடைத் தேர்தலையே அதிமுக கூட்டணி புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக மீது இதே குற்றச்சாட்டைத் தான் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் கூறி வருகின்றனர். இதனால் ராமதாஸ் கோரிக்கைப்படி தேர்தலை அதிமுக கூட்டணி புறக்கணிக்குமா இல்லையா என்பது குன்னூரில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் தெரிந்துவிடும்.
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்றவை அதிமுக எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படும் என்று தெரிகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட்டுக்கும் அதிமுகவுக்கும் இடையே அறிக்கைப் போர் நடந்து வருவதால் இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சிபிஎம் நீடிக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications