விமான கடத்தல் வழக்கு-ஷெரீப் விடுதலை
மலேசியா சென்றிருந்த முஷாரப் தனி விமானத்தில் நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது தனது விமானத்தை தரையிறக்க நவாஸ் ஷெரீப் அனுமதி மறுத்ததாகவும், ராணுவத்தினரின் உதவியோடு தான் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் கூறிய முஷாரப், பாகிஸ்தான் திரும்பியவுடன் ராணுவ புரட்சியை நடத்தினார்.
ஆனால், ராணுவப் புரட்சிக்கு முழு திட்டத்தையும் போட்டுவிட்டு மலேசியா சென்ற முஷாரப், நாடு திரும்பும்போது தனது விமானததை ஷெரீப் தரையிறக்க மறுத்தார் என்று கூறி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று ராணுவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படியே டிராமா அரங்கேறியது. முஷாரப்பின் விமானம் தரையிறங்கும் முன்பே இஸ்லாமாபாத் விமான நிலையம் ராணுவம் வசம் வந்திருந்தது. நாட்டின் அரசு தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவையும் ராணுவம் வசம் வந்திருந்தன.
இதையடுத்து தரையிறங்கிய கையோடு நவாஸ் ஷெரீபை கைதும் செய்தார் முஷாரப். பின்னர் செளதி மன்னரின் தலையீடு காரணமாக அவர் விடுவிக்கப்பட்டு செளதி அரேபியாவில் அடைக்கலம் தரப்பட்டார்.
ஆனாலும் ஷெரீப் மீது தனது விமானத்தைக் கடத்த முயன்றதாக வழக்குப் போட்டார் முஷாரப்.
இந்த வழக்கை விசாரித்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை சிந்து மாகாண உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால் தான் கடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் போட்டியிட முடியவில்லை.
இந் நிலையில் நவாஸ் ஷெரீப் ஆயுள் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதி நாசிர் உல்முஸ்க் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சு இதை விசாரித்தது.
இன்று தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் உறுதி செய்யப்படவில்லை என கூறி அவரது ஆயுள் தண்டனையை ரத்து செய்தனர். இதன் மூலம் அவர் தேர்தலில் போட்டியிட இருந்த தடையும் நீங்கிவிட்டது.
இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே வழக்கறிஞர்கள் போராட்டத்தால் ஆட்சியை விட்டு இறங்கினார் முஷாரப். இப்போது மறைந்த பெனாசிர் புட்டோவின் கட்சி தான் ஆட்சியில் உள்ளது. இதற்கு ஷெரீப் கட்சி ஆதரவு தந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.