இடைத் தேர்தல்: கண்ணப்பன்-ராமகிருஷ்ணனுக்கு திமுக சீட்?
கடந்த மக்களவைத் தேர்தலின்போது இருவரும் கட்சி தாவினர். இதனால் எம்பி தேர்தலில் இவர்களுக்கு சீட் தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தரப்படவில்லை. இருப்பினும் அந்தத் தேர்தலில் இருவரும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவுக்கு வந்த கண்ணப்பனுக்கும், கம்பம் தொகுதியில் வென்று ராஜினாமா செய்துவிட்டு திமுகவக்கு வந்த ராமகிருஷ்ணனுக்கும் வரும் இடைத் தேர்தலில் அதே தொகுதிகளி்ல் போட்டியிட திமுக சீட் தரும் என்று தெரிகிறது.
இது குறித்து கண்ணப்பன் கூறுகையில், இடைத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து முதல்வர் கருணாநிதிதான் முடிவு செய்வார் என்றார்.
அதே நேரத்தில் போல கம்பம் தொகுதியில் போட்டியிட ராமகிருஷ்ணன் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆனால், ராமகிருஷ்ணனின் சகோதரர் மறைந்த நடராஜனின் மகன் பிரிதிவிராஜும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். இவர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரை சந்தித்து வாய்ப்புக் கேட்டுள்ளார்.
இதேபோல் தேனி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மூக்கையாவும் போட்டியிட வாய்ப்புக் கேட்டுள்ளார்.
அதிமுக...
இந் நிலையில் இடைத் தேர்தல் குறித்து முடிவெடுக்க நாளை மறுதினம் அதிமுக செயற்குழு கூடுகிறது. கொடநாட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அருகே குன்னூரில் உள்ள விவேக் ஹோட்டலில் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இதில் தேர்தல் புறக்கணிப்பா அல்லது போட்டியா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
போட்டியிடும் முடிவை எடு்த்தால் பர்கூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் அதிமுக மீண்டும் போட்டியிடும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் பர்கூரில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மதிமுக...
கூட்டணிக் கட்சியான மதிமுக கடந்த தேர்தலில் வென்ற தொண்டாமுத்தூர், கம்பம் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விரும்புகிறது.
ஆனால், திருமங்கலம் இடைத் தேர்தல் ஸ்டைலில் அதிமுகவே 5 இடங்களில் போட்டியிட முடிவு செய்தால் மதிமுக விட்டுக் கொடுக்க வேண்டி வரலாம். ஆனால், அப்படிப்பட்ட நிலை வராது என மதிமுக கருதுகிறது.
மதிமுக சார்பில் கம்பம் தொகுதியில் போட்டியிட நகர்மன்ற முன்னாள் தலைவர் பாஸ்கரன் சீட் கேட்டு வருகிறார்.
ஸ்ரீவைகுண்டம்-60 சாவடிகள் பதட்டமானவை:
இதற்கிடையே இடைத் தேர்தல் நடக்கவுள்ள இன்னொரு தொகுதியான ஸ்ரீவைகுண்டத்தில் 60 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என தூத்துக்குடி மாவட்டக் கலெக்டர் பிரகாஷ் கூறியுள்ளார்.
இத் தொகுதியின் தேர்தல் அலுவலராக டி.ஆர்.ஓ. துரை ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 172 பூத்களில் 60 பூத்கள் பதற்றம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் மரணமடைந்ததால் இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது. இங்கு திமுக கூட்டணி சார்பில் காங்கிரசே போட்டியிடவுள்ளது.
இவை தவிர பர்கூர், இளையாங்குடியிலும் இடைத் தேர்தல் நடக்கிறது.
நடுவிரலில் மை..
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து இரு மாதங்கள் கூட ஆகாத நிலையில் வாக்காளர்களின் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட அடையாள மை இன்னும் அழியாமல் உள்ளது. இதனால் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்படவுள்ளது.